என்னது.. மலேசியா சிவகங்கை மாவட்டத்திற்கு ஷிப்ட் ஆகிவிட்டதா? அதிரி, புதிரி அரசு அதிகாரி
மலேசியா நாட்டை சிவகங்கை மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்த வட்டவழங்கல் அலுவலருக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை: தமிழகத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப் படுகிறது.
கடந்த 1-ந் தேதி ஸ்மார்ட்கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அரசு சார்பில் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், ஆதார் கார்ட் ஆகியவற்றில் தவறுகள் இல்லை என்றால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். அந்த அளவிற்கு சூப்பராக 'எழுத்துப் பிழை இல்லாமல்' இருக்கும். பல அடையாள அட்டைகளில் யாருடைய புகைப்படம் இருக்க வேண்டுமோ அவர்களுடையது கண்டிப்பாக இருக்காது. பக்கத்து வீட்டாரின் புகைப்படம் இருப்பது இன்னும் தமாஷாக இருக்கும்.
வழங்கல்
பெயர் மாற்றம், புகைப்பட மாற்றத்தைத் தாண்டி இப்போது மற்றொரு நாட்டையே சிவகங்கை மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டனர் நமது சிவகங்கை மாவட்டம் திருப்புத்துர் வட்ட வழங்கல் அலுவலர்.
ஸ்மார்ட் கார்ட்
அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சுரேஷ் என்பவர் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளார். அந்த அட்டையில் "தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, குடும்ப அட்டை, குடும்பத் தலைவரின் பெயர்: ஆர். சுரேஷ், தந்தை/கணவரின் பெயர்: இராமசாமிகுருக்கள், பிறந்தநாள்: 30/06/1968" என்று இருந்தது.
சிவகங்கையில் மலேசியா
இதுவரை எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. முகவரியை பார்த்தப் பிறகுதான் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். முகவரியில் 36, கோலாலம்பூர், மலைசியா, முறையூர், சிவகங்கை, தமிழ்நாடு, 630501 என்றிருந்தது. சிவகங்கையில் எங்கே இருக்கிறது மலேசியா, கோலாலம்பூர் என்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எல்லோரிடமும் கேட்டு சுற்றி வருகிறாராம் சுரேஷ்.
நன்றி
மலேசியா கோலாலம்பூரை சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டு வந்த சிவகங்கை மாவட்டம் திருப்புத்துர் வட்ட வழங்கல் அலுவலருக்கு மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்...