தூத்துக்குடியில் பயங்கரம்... நர்ஸ் தொண்டையில் துப்பாக்கியால் சுட்டு ரூ. 3 லட்சம் நகை பறிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை செவிலியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கநகையை பறித்து சென்ற சம்பவம் மாநகர மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி செல்சீனி காலனியை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(37). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை கணவர் வேலைக்கு சென்ற பின்னர் சுசிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநேரத்தில் வீட்டின் முன்பு சத்தம் கேட்டுள்ளது. இதனைக்கண்ட சுசிலா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்குநின்ற மர்மமனிதர் சுசிலாவின் கழுத்தில் கிடந்த ரூ.3லட்சம் மதிப்பிலான 11பவுன் தங்கநகையை பறிக்க முயற்சித்தார். நகையை காப்பாற்றுவதற்காக போராடிய சுசிலாவை தாக்கிய அந்த மர்மநபர் சுசிலாவிடம் பீரோவின் சாவியையும் கேட்டுள்ளர்.
சுசிலா சாவியை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த மர்மநபர் சுசிலாவின் தொண்டை பகுதியில் துப்பாக்கியால் சுட்டு விட்டு கழுத்தில் கிடந்த செயினை மட்டும் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார்.
காயம்அடைந்த சுசிலா படுகாயத்துடன் தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள உறவினர் வீட்டின் முன்பு சென்று மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர்கள் சுசிலாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சிகிச்சையைத் தொடர்ந்து சுசிலா மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக டாக்டர்கள் கூறினர்.
சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டி.ஐ.ஜி சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த சிலநாட்களாக கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வந்த சூழலில் பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டராக கிங்ஸ்லி தேவானந்தம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றவுடன் காவல்துறையினரின் பணிகளை துரிதப்படுத்தினார்.
இரவு நேரங்களில் தனது காவல்எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரை நாள்தோறும் தவறாமல் ரோந்து அனுப்பியதுடன் தானும் மாறுவேடங்களில் நகர்பகுதிகளை கண்காணித்து வந்தார். இதனால் இப்பகுதிகளில் நகைபறிப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டது. அத்துடன் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்தம் நேர்மையாக பணியாற்றினார். கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை ஒழித்துகட்டி குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வந்தார்.
இவரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் இவரை பணியிடமாறுதல் செய்ய வலியுறுத்தினர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவானந்தம் கடந்த இருதினங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இவர் பணிமாறுதல் செய்யப்பட்ட இரண்டு தினங்களில் இந்த கொடூரமான கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இனியாவது நேர்மையாக செயல்படும் காவல்துறையினருக்கு உரியமரியாதை கிடைக்கட்டும். அந்த மரியாதை விலைமதிப்பில்லாத மனித உயிர்களை குற்றவாளிகள், கொள்ளையர்களிடம் இருந்து நிச்சயமாக பாதுகாக்கும் என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் உணர்ந்தால் சரிதான் என்பதே பொதுமக்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications