177.25 டிஎம்சி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம்... ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய 177.25 டிஎம்சி நீரை முழுமையாக பெற்றத் தருவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுவதும் படித்த பிறகே அரசு கருத்து சொல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: 2007ல் காவிரி நீர் தொடர்பாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றது, 17 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகே இந்த தீர்ப்பு வந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.
2007 முதல் 2013 வரை திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த வரை காவிரி நீர் விவகாரத்தில் எதுவுமே செய்யவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் உச்சநீதிமன்றத்தில் போராடி காவிரி தீர்ப்பை அரசிதழில் கொண்டு வந்தார் என்பது வரலாறு. வரலாற்றை யாராலும் மாற்றி விட முடியாது.
இன்று உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீட்டில் என்ன தீர்ப்பு அளித்திருக்கிறது என்று முழுவதும் பார்க்காமல் கருத்து சொல்ல முடியாது. உச்சநீதிமன்றம் அறிவித்தபடி 177.25 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு பெற்று தந்து காவிரி டெல்டா விவசாயிகளை காப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.