அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்... துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் நியமனம்
தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனிடம் இருந்த இந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011- 16 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டசபையின் அவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் அந்த பதவி ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்கப்பட்டது.
பின்னர் சசிகலா ஆதரவாளரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர்இ இதுவரை இரு கூட்டத்தொடர்களை நடத்தியுள்ளார். இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.
8-ஆம் தேதி சட்டசபை
மேலும் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டு நிலையில் செங்கோட்டையனிடம் இருந்த அவை முன்னவர் பதவி தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை வரும் 8-ஆம் தேதி கூடும் நிலையில் இதுபோன்ற நியமனம் செய்யப்பட்டுள்ளது.
முன்வைக்கும் கேள்விகள்
அவை முன்னவர் பதவி என்பது எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். ஆனால் அவர் முன்வைக்கும் கட்சி ரீதியிலான கேள்விகளுக்கு அவை முன்னவர்தான் பதிலளிக்க முடியும்.
தீர்மானங்கள் முன்மொழிதல்
ஒரு உறுப்பினர் பேசி கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு பேச அவை முன்னவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் அரசு சார்பில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் அவை முன்னவரே முன்மொழிவார். அதிமுக இணைந்த பிறகு ஓபிஎஸ்ஸுக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் கூடி வருகிறது.
அதிமுக அதிருப்தி
அதிமுகவின் அணிகள் இணைந்த பிறகு, செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறை சார்ந்தவைக்கு மட்டுமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து வந்தார். மற்றபடி யாரையும் விமர்சனம் செய்து அவர் பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.