ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் திடீர் திருப்பம்... மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினருக்கு ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவுள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆ்ம தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது. மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா அணி சார்பில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளே அவர் மற்ற கட்சிகள் தம்மை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல்,சசிகலா கும்பலை துரத்த அனைத்து கட்சியினரும் ஆதரவு தாருங்கள் என்று ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவு கோரியிருந்தார்.
இந்நிலையில் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசினர். அப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் தமது வேட்பாளர் மதுசூதனனை ஆதரிக்குமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாசனிடம் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு அவரும் ஒப்புக் கொண்டு மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தமாகா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.