கருகிய பயிர்களுக்கு… விவசாயிகளுக்கு நிவாரணம்.. வறட்சி குறித்து முதல் முறையாக வாய் திறந்த தமிழக அரசு
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: காய்ந்து, கருகி, கிட்டத்தட்ட 80 உயிர்கள் போன பிறகு தற்போதுதான் தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று. அதற்கான ஆய்வுகளை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் உரிய முறையில் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயிர்கள் கருகி நாசமாகின. அதுஏற்படுத்திய மன வேதனையில் சுமார் 80 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்து போராடி வந்தன.
இதனையடுத்து, தமிழக அரசு வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் வறட்சி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வு அறிக்கையை 10ம் தேதி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டந்தோறும் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில் கொடுக்கப்படும் அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் பயிர் காப்பீட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
எனினும், பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணமடைந்தும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக தமிழக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications