“No Comments".. ஸ்டெர்லைட் குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு பற்றி கருத்து கூற மறுத்த ஓபிஎஸ்!
சென்னை : மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டார்கள் என்ற ஆளுநரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "கருத்து கூற விரும்பவில்லை" என கேள்வியைத் தவிர்த்தார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதராவாகப் பேசி மீண்டும் பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தமானதுதான். ஆனால், வெளிநாட்டின் நிதியை பயன்படுத்தி மக்களை போராட்டம் செய்ய தூண்டிவிட்டு ஆலையை மூடிவிட்டனர். நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது என்று பேசினார்.
ஆளுநரின் இந்த பேச்சுப் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் பேச்சுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநர் மாளிகை முன்பு வரும் 12ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் ஆளுநர் பேச்சைக் கண்டித்துள்ளார். ஸ்டெர்லைட் குறித்து கவர்னர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் பொது இடங்களில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது அழகல்ல. நமது நாட்டின் பிரதமர் உலகளவில் உள்ள தலைவர்கள் எல்லாம் போற்றக்கூடிய ஒரு தலைவராக திகழ்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டின் சதியோ, வெளிநாட்டின் தலையீடோ இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி ஆளுநர் ரவியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் "No Comments" எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார்.
2018ல் ஓபிஎஸ் சொன்னது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற 2018 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, "ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும். சட்ட ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் அதையும் கடந்து ஆலையை நிரந்தரமாக மூடும் பணிகளை அரசு மேற்கொள்ளும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications