ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிரடி செக் வைத்த ஓபிஎஸ்!
ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஓபிஎஸ் அதிரடியாக செக் வைத்துள்ளார். இதனால் ஆளுநர் உடனே எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என கூறப்படுகிறது.
சென்னை: ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருக்கும் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலரும் தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
எடப்பாடி பழனிச்சாமி அண்ட் கோ ஆளுநர் மாளிகையை விட்டு கிளம்பிய பின்னர் ஓபிஸ் அணி உள்ளே நுழைந்தது. ராஜ்யசபா எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் இருவரும் ஆளுநரை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த ஒரு கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கும் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிகம் இருக்கின்றனர்; ஆகையால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என அதில் வலியுறுத்தி இருக்கிறார்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடியால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.