ஓபிஎஸின் கருத்து மனவேதனையை தரும்.. பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன்!
ஓபிஎஸின் கருத்து அதிமுக தொண்டர்களுக்கு மனவேதனையை தரும் என பேச்சுவார்த்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து அதிமுக தொண்டர்களுக்கு மன வேதனையை தரும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இணைப்புக்கான பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்துவதாக எடப்பாடி அணியினர் நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ஓபிஎஸின் நிலைப்பாடு குறித்து துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார். அடிமட்ட தொண்டன், உண்மையான தொண்டன் மத்தியில் ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்து மன வேதனையை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
எம்ஜிஆரும், ஜெ.வும் குல தெய்வம்
தொடர்ந்து 45 ஆண்டுகளாக காப்பாற்ற உழைத்தவர்களுக்கு இந்த சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தங்களது குலதெய்வத்திற்கு அடுத்தபடியாக எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் தான் குலதெய்வமாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலை குலச்சின்னம்
இரட்டை இலையை குலச் சின்னமாக கருதுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க.வும், ஆட்சியும் தொடரும் என்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஜெ.ஆன்மா மன்னிக்காது
ஜெயலலிதா சொன்னதை மனதில் வைத்து அனைவரும் செயல்படவேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார். இதற்கு இடையூறாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றும் அவர் கூறினார்.
ஒற்றுமையாக செயல்படவேண்டும்
இரட்டை இலைச் சின்னத்தை மீட்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் பொள்ளச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்தார். அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் போதே இதற்கான செயலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்றார்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் எந்தவித பலனும் இல்லை என்றும் அவர் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு என்ன செய்வது என்பது குறித்து முதல்வரும் மேல்மட்ட நிர்வாகிகளும் ஆலோசனை செய்து முடிவு செய்வார்கள் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.