இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு அவசியமானது.. மோடி சந்திப்புக்குப் பின் ஒபாமா அறிவிப்பு
சென்னை: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருநாட்டு அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பேட்டியளித்தனர்.
அப்போது ஒபாமா பேசுகையில், ‘இந்தியாவின் சிறப்பான உபசரிப்புக்கு நன்றி. மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்திலும் முன்னேற்றம் உள்ளது. ஏற்றுமதி சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து இருவரும் ஆலோசித்தோம். இந்தியாவுடனான உறவு அமெரிக்காவிற்கு அவசியமானது. தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப் படும். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் விவகாரம் குறித்து விளக்கம்:
ரஷ்யா மீது அமெரிக்காவிற்கு பகையில்லை. ரஷ்யாவின் பொருளாதாரம் பலவீனமடைவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யா மீதான பொருளாதார தடை தொடரும்.
ஏமனில் நிலவும் அரசியல் சூழல் கவலை அளிக்கிறது. ஏமனில் வாழும் பெரும்பாலான மக்கள் அரசியல் தீர்வையையே விரும்புகின்றனர். உக்ரைன் விவகாரத்தில் ராணுவ ரீதியாக ரஷ்யாவை அணுகுவது சரியாக இருக்காது' எனத் தெரிவித்தார் ஒபாமா.
ஒபாமா வந்தது மகிழ்ச்சி - மோடி
மோடி பேசுகையில், தனது அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒபாமா இந்தியா வந்தது மகிழ்ச்சி. உலக அமைதி, வளத்திற்கு இந்திய - அமெரிக்க ஒத்துழைப்பு அவசியம். நூற்றாண்டின் போக்கை நிர்ணயிக்கும் நாடுகளாக இந்தியா - அமெரிக்கா இருக்கும். பயங்கரவாதம் சர்வதேசத்திற்கு மீண்டும் அச்சுறுத்தலாக உள்ளது. பாராபட்சம் பார்க்காமல் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.
எனக்கும், ஒபாமாவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளதாக மகிழ்ச்சி. இருவரும் அனைத்து விசயங்களையும் திறந்த மனதுடன் பேசிக் கொள்வதாகவும், அதன் மூலம் இருநாடுகளும் நெருங்கி வந்துள்ளதாக அவர் கூறினார்.
ஹாட்லைன் வசதி:
இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக ரீதியிலான ஒத்துழைப்பிற்கு இருநாடுகள் இடையே ஒப்பந்தம், ராணுவத்திற்கு தேவையான நவீன ஆயுதங்கள் தயாரிக்க கொள்கை முடிவு குறித்து பேசியதாக இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
இதேபோல், மோடி - ஒபாமா நேரடியாக தொடர்புக்கொள்ள ஹாட் லைன் வசதி ஏற்படுத்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இது இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.