கன்னியாகுமரியை விட்டு நகரும் ஓகி புயல்.. விலகிச் செல்ல தொடங்கியிருப்பதாக வானிலை மையம் தகவல்!
கன்னியாகுமரியை விட்டு ஓகி விலகிச்செல்ல தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் தற்போது விலகிச்செல்ல தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இன்று காலை ஓகி புயலாக மாறியது. இதனால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பலத்த காற்றால் கன்னியாகுமரி மாவ்டடத்தில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குமரியில் கடல்சீற்றம்
ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
70கிமீ தொலைவில் ஓகி புயல்
இந்நிலையில் ஓகி புயல் கன்னியாகுமரியை விட்டு விலகிச்செல்ல தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஓகி புயல் தற்போது கன்னியாகுமரியில் இருந்து தென்மேற்கு திசையில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் 60கிமீ தொலைவில்
காலையில் கன்னியாகுமரியில் இருந்து தென்திசையில் 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். இந்த புயல் லட்சதீவை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சூறைக்காற்றுடன் மழை
இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.