தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசியா?.. அரிசிக் கடைகளில் ஏறி இறங்கும் அதிகாரிகள்!
நெல்லை: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. வி்லை குறைவாக இருப்பதோடு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதால் சந்தையில் இதன் மவுசு அதிகரித்துள்ளது.

இப்படி சீன மோகம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்ற உணவு பொருட்களும் சந்தையில் ஊடுருவ தொடங்கியுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, உத்தரகாண்ட் போன்ற இடங்களில் சமீபத்தில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சாப்பிட்டால் உடலுக்கு பல கேடுகள் வரும் என்பதால் இதனை தடுக்க தமிழக உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா தமிழகம் முழுவதும் உள்ள அரிசி கடைகளில் சோதனை நடத்தவும், அரிசிகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்க அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நெல்லை டவுன், பாளை உள்ளிட்ட இடங்களில் அரிசிகளின் மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications