ஏற்காடு இடைத்தேர்தல்: வாழப்பாடி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாழப்பாடி பேளுர் பிரிவு ரோடு பகுதியில் ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன், தலைமையிலான பறக்கும் படையினர் ஞாயிறன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டெம்போ நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதில் ரூ.1 லட்சம் பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. பணத்தை வைத்திருந்த பெத்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாக்கு வியாபாரி சின்னான்(30) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் சிங்கிபுரத்தில் பாக்கு விற்பனை செய்து விட்டு பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையின் ரூ.1 லட்சம் பணம் மற்றும் மினி டெம்போவை பறிமுதல் செய்தனர்.
அவை இன்று ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி சரியான ஆவணங்களை காட்டினால் அவர்களிடம் பணத்தை கொடுப்பார். இல்லையென்றால் அவை வருமான வரித்துறையினரிடம் பணம் ஒப்படைக்கப்படும்.
கடந்த சில நாட்களாகவே வாகன சோதனையின் போது வியாபாரிகள் கொண்டு செல்லும் பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு விசாரணைக்குப் பின்னர் அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications