சென்னை சாலையில் ஆறாய் ஓடிய எண்ணெய் படலம்.. எண்ணையில் வழுக்கி விழுந்து பல வாகன ஓட்டிகள் காயம்
சென்னையில் திடீரென சாலைகளில் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை: சென்னையில் கிண்டி, கோடம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் 20க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
சென்னையில் குப்பைகளை ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து கசியும் கழிவுகள் சாலையில் படிந்திருந்தது.
சென்னையில் இன்று மாலை சில இடங்களில் மழை பெய்ததால் அக்கழிவுகள் வழவழப்பாக மாறியது. இதனால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்க முடியாமல் வாகனத்துடன் சறுக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
சென்னை வள்ளுவா் கோட்டம் சிக்னல் குப்பைக்கிடங்கு அருகேயும் சாலையில் திடீரென எண்ணெய் போன்ற படலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லுவோர் கவனமாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, பகுதிகளில் எண்ணெய் படலம் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எண்ணை படலத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.