ஓலா டிரைவரால் விலாசினிக்கு நேர்ந்த பகீர் அனுபவம்: கையில் கத்தி அவசியம் பெண்களே...
சென்னை: ரொம்ப பேசுன கழுத்தை அறுத்துடுவேன்... துணைக்கு ஆள் இன்றி தனியாக இருக்கும் போது நள்ளிரவில் இப்படி யாராவது மிரட்டினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு அனுபவம் சென்னையைச் சேர்ந்த விலாசினிக்கு நேர்ந்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் இருந்து வளசரவாக்கத்துக்கு கடந்த ஞாயிறு இரவு ஓலா காரில் பயணித்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கவே இரண்டு முறை விலாசினி அவரிடம் மித வேகத்தில் செல்லுமாறு கோரியுள்ளார். அதற்கு டிரைவர் ஒருமையில் திட்டியதோடு காரில் இருந்து இறக்கி விட்டு விட்டார்.

அண்ணா பல்கலைக்கழகம் அருகே அவர் தனியாக நின்றிருக்க அந்த கார் ஓட்டுநரும் அங்கேயே நின்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவ்வழியாக ஒரு ஆட்டோ வர அதில் ஏற விலாசினி ஏற முற்பட்டபோது அந்த கார் டிரைவர் அருகில் வந்து ஆபாசமாக திட்டியதோடு கையை முறுக்கிக் கொண்டு கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.
அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறிச் சென்ற விலாசினி வழியில் எங்காவது போலீஸ் ரோந்து வாகனம் இருக்கிறதா எனத் தேடிக் கொண்டே சென்றிருக்கிறார். ஆனால், ஒரு ரோந்து வாகனம்கூட கண்ணில் படவில்லை.
கடைசியாக ராமபுரத்தில் ஒரு அவுட்போஸ்ட்டில் சில காவலர்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர். ஆனால், நந்தம்பாக்கத்திலோ இது எங்கள் சரகத்துக்கு உட்பட்டதல்ல நீங்கள் கிண்டி காவல் நிலையத்துக்கே செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். மீண்டும் கிண்டி செல்ல விலாசினி யோசிக்கவே, அவர்கள் துணைக்கு ஒரு காவலரை வளசரவாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த அனுபவத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விலாசினி.
இரவு 10 மணிக்கு மேல் எனக்கு ஆபத்து இருக்கிறது என நான் கூறியும் என்னை ஏன் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் அலைக்கழித்தார்கள். எனது புகாரை போலீசார் உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? ஏற்கெனவே அந்த ஓட்டுநர் என்னை பின் தொடரலாம் என்ற அச்சத்தில் இருந்த என்னை நந்தம்பாக்கம் செல்லுங்கள்.. கிண்டி செல்லுங்கள் என ஏன் அலைக்கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் விலாசினி. விலாசினியின் பதிவு அதிகமாக பகிரப்பட்டது. கமெண்ட் பகுதியில் பலரும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
காவல்துறை உறுதி:
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் புகாரை உடனடியாக பதிவு செய்யாதது குறித்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், புகார் அளிக்க வருபவர்களை அங்குமிங்கும் அழைக்கழிப்பது தடுக்கப்படும். புகார் பதிவு குறித்து போதிய அறிவுரை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓலா நிறுவனம் வருத்தம்
ஓலா நிறுவனத்துக்கு விலாசினியின் நண்பர் புகார் அளிக்க அதன் அடிப்படையில் ஓலா அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி விலாசினியை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் தெரிவித்த 'வருத்தம்' பெயரளவில் மட்டுமே இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, அந்த ஓட்டுநரை ஒருவார காலத்துக்கு நன்நடத்தை வகுப்புக்கு அனுப்புவோம். பின்னர் அவர் மீண்டும் கார் ஓட்டுவார் என்று கூறியுள்ளனர்.
கத்தி அவசியம்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவமே இன்னும் மறையவில்லை அதற்குள் அடுத்தடுத்து கொலைகளும், பெண்களுக்கு மிரட்டல்களும் அதிகரித்து வருகின்றன. வெளியே செல்லும் பெண்களே உங்களை பாதுகாக்க அவசியம் ஹேண்ட் பேக்கில் கத்தி வைத்துக்கொள்வது நல்லது என்பது சமூக நல ஆர்வலர்களின் அறிவுறுத்தலாகும்.












Click it and Unblock the Notifications