ரூபாய் நோட்டை குப்பை தொட்டியில் வீசிய வாலிபர்.. பேஸ்புக் போஸ்டால் போலீசில் சிக்கினார்
செல்லாத ரூபாய் நோட்டாக இருந்தாலும் அவற்றை அவமதிப்பது குற்றமாகும்.
காஞ்சிபுரம்: செல்லாத 500 ரூபாய் நோட்டை குப்பைத் தொட்டியில் வீசி அவமதிப்பு செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுராந்தகத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். ஆட்டோ டிரைவரான இவர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த உடன் கடுப்பாகிவிட்டார். இந்த அறிவிப்பு குறித்த கருத்துக்களை தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்து வந்தார்.

மேலும், 500 ரூபாய் நோட்டை குப்பைத் தொட்டியில் வீசியப்படி புகைப்படம் ஒன்றை சாந்தகுமார் எடுத்துள்ளார். அதனையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், 8000 மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகளை நேற்று காஞ்சிபுரம் நகராட்சி குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
இதன் பிறகு, குப்பைத் தொட்டியில் போட்டப் பணத்தை மீண்டும் எடுக்க வந்துள்ளார் ஆட்டோ டிரைவர் சாந்தகுமார். அப்போது, அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். ரூபாய் நோட்டுகளை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் உத்தர பிரதேசத்தில் 1000 ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாக எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications