"வீட்டு பக்கத்தில் மின்மாற்றி வேண்டாம்” - குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்திய மூதாட்டி
கோவில்பட்டி: கோவில்பட்டி லெனின் நகரில் தனது வீட்டின் அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி மின்மாற்றி அமைப்பதற்கான பணி சம்பந்தமாக தோண்டப்பட்ட குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி லெனின் நகர், ஜி.கே.நகர் பகுதியில் குறைந்தளவு மின்சாரம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாம்.

இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக ஒரு மின்மாற்றி அமைப்பதற்கு மின்சார வாரியம் முடிவு செய்து, லெனின் நகர் பகுதியில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டதாம். அதையடுத்து நேற்று மின்மாற்றி அமைப்பதற்கான பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டார்களாம்.
அப்போது தோண்டப்பட்ட குழியில் அப்பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் மனைவி முத்துலட்சுமி தனது வீட்டருகே மின்மாற்றி அமைக்கக் கூடாது என்றும், தனது தெருவின் சந்திப்பில் எவ்வித இடையூறுமின்றி மின்மாற்றியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எனது வீட்டின் வாசலை மாற்றி கட்ட இருப்பதாகவும், அதனால் மின்மாற்றியை தனது வீட்டின் அருகே அமைப்பதை கைவிட வேண்டும் எனக் கூறி போராடினார்.
தகவலறிந்தவுடன் மின்வாரிய உதவிப் பொறியாளர் நாகராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துலட்சுமி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலர் தமிழரசன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து மின்மாற்றி அமைப்பதற்கான பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து உதவிப் பொறியாளர் நாகராஜன் கூறுகையில், "குறைந்தளவு மின்சாரத்தை தவிர்ப்பதற்காகவே மின்மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களிடம் கலந்து பேசி மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications