அரசிடம் கையேந்தாமல் மக்கள் தாங்களே சுயமாய் கட்டிய தடுப்பணை
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கரசெட்டியப்பட்டி பகுதியில் சேர்வராயன் மலை தொடரின் மேற்கு சரபங்கா நதி உருவாகின்றது.
சாரங்கா நதியானது உருவாகும் இடத்தில் வனப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் 10 கிலோ மீட்டர் ஆற்றில் பயணித்து காமலாபுரம் ஏரியில் கலப்பதால் வனத்தை ஒட்டியுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியால் வாடி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீர் இன்றி தவித்தனர்.
சேர்வராயன் மலைப் பகுதியை ஒட்டியுள்ள பன்னிகரடு பகுதியில் வனப் பகுதியில் அணைகட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி அதிகமாகியுள்ளது.
வேறு வழியின்றி வறட்சியின் பிடியில் இருந்து மீள வனத் துறையும் பொதுமக்களும் சேர்ந்து குழு அமைத்து ஆலோசனை செய்து தாங்களே அணையை கட்ட வேண்டும் என முடிவு செய்து வனத்துறையிடம் அனுமதி பெற்றனர். இதில் வனத்துறை சார்பாக நபார்டு வங்கி நிதி உதவியில் ரூ 6 லட்சம் ரூபாய் ஒதுக்கி கொடுத்தது.
இதில் 9 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வேலை தற்போது 15 லட்சத்தை தாண்டி வேலை நடைபெற்று வருவதாக விவசாயிகள் கூறினர்.
அருகில் இருக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து இந்த சிறிய அணை கட்டி வருகின்றனர்.
பணம் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் விவசாயிகள் வீட்டிற்கு ஒரு மனிதர் என்ற அடிப்படையில் மனித உழைப்பு மற்றும் அவர்களிடம் உள்ள டிராக்டர் கிராம மக்களிடம் உள்ள எந்திரங்களை வைத்து பணியை செய்து வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் மழை நீரை சேமித்து தங்கள் பகுதி வறட்சி இல்லாத பகுதியாக உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளனர். தண்ணீர் இன்றி தவித்த மக்கள் தாங்களாகவே உருவாக்கியுள்ள இந்த சிறிய வகை அணையை மற்ற ஊர் பொதுமக்களும் பார்த்து செல்கின்றனர்.