தமிழகத்தில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்வு
தனியார் பால் நிறுவனங்களின் விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஹோட்டல், கேன்டீன்களில் டீ, காபி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
சென்னை: டோட்லா, ஜெர்சி ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தவுள்ளன. இதனால் ஹோட்டல், கேன்டீன்களில் டீ, காபி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு டோட்லா, திருமலா, ஹெரிட்டேஜ், ஜெர்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் பால் விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அத்தியாவசிய உணவான பால் தேவையை சமாளிப்பதில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது. அரசு நிறுவனமான ஆவின் தினசரி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மாநிலத்தின் வணிக பயன்பாட்டில் 85 சதவீதம் தனியார் பால் தான் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வளவு உயர்வு?
திருமலா, டோட்லா, ஜெர்சி, ஹெரிடேஜ் ஆகிய 4 தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனங்களின் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 1 லிட்டர் பாக்கெட்டின் விலை ரூ.2, அரை லிட்டர் பாக்கெட்டின் விலை ரூ.1 ஆக அதிகரிக்க உள்ளது.
உயர்வுக்கு பின்...
டோட்லா, ஜெர்சி ஆகிய பால் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. திருமலா, ஹெரிடேஜ் ஆகிய பால் விலை நாளை (6-ஆம்தி தேதி) நள்ளிரவு முதல் விலை உயர்கிறது. தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுகிறது. ஒரு லிட்டர் தயிர் ரூ.50-ல் இருந்து 55 ஆகவும், 200 மில்லி பாக்கெட் ரூ.10-ல் இருந்து 11 ஆகவும் உயர்கிறது.
கண்டனம்
ஆவின் பாலை விட தனியார் பால் லிட்டருக்கு ரூ.8 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசுர விலையேற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டம்
இதுகுறித்து நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டமுன் வடிவை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். தங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அனைத்து கட்சித் தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
டீ, காபி விலை உயருகிறது
தனியார் பால் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அதனை நம்பி இயங்கி வரும் ஹோட்டல்கள், கேன்டீன்களில் காபி மற்றும் டீ விலை கடுமையாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவர்.