காவிரிக்காக ஏப்ரல் 3ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 3ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமசிங்கராஜா சென்னையில் இன்று அளித்த பேட்டி:
மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, பாமக சார்பில் வரும் ஏப்ரல் 11ம் தேதி கடையடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. ஆனால், வியாபாரிகளுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஒரே போராட்டம் என்ற அளவில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
கர்நாடகாவில் ஒரே குடையின்கீழ் போராடுகிறார்கள். அதேபோல தமிழகத்தில் அனைத்து அமைப்புகளும் இணைந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்த வணிகர் சங்க பேரமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. அன்று நடைபெறும் கடையடைப்பன்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடை ஏற்படாது. பத்திரிகை, பால் ஆகியவற்றை காலை நேரத்தில், கடையை மூடி வெளியே வைத்து விற்பார்கள். மற்ற பொருட்கள் விற்பனை கிடையாது.
ஏப்ரல் 1 அல்லது 2ம் தேதி மக்கள் முன்கூட்டியே பொருட்களை மக்கள்வாங்கி வைத்துக்கொண்டு, எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
மத்திய அரசே நீதிமன்ற உத்தரவை மீறுகிறதே நாம் ஏன் மீறக்கூடாது என்ற எண்ணம் வந்துவிட கூடாது என்பதற்காக எங்கள் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.