ஆட்டுக்குத் தழை வெட்டப் போய் தேனீ கொட்டி ஒருவர் பலி... 2 பேர் காயம்
சேலம்: சேலத்தில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இரவி. விவசாயியான இவரது உறவினர் ஆறுமுகம். நேற்று இவர்கள் இருவரும் அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள பெரியசாமியின் தோட்டது கிணற்றில் வளர்ந்திருந்த மரத்தில் இருந்து, ஆட்டு தீவனத்திற்கு தழை வெட்டியுள்ளனர்.
அப்போது, அந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்துவந்த மலைத்தேனீக்களின் கூடு அடிபட்டு கலைந்து விட்டது. அதிலிருந்து வெளியேறிய தேனீக்கள் கூட்டம், ரவி மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் துரத்தி துரத்தி கடித்தது.
அதிக தேனீக்கள் கடிதத்தில் படுகாயமடைந்த ரவி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவரையும் காப்பாற்ற முயற்சித்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரும் காயமடைந்தார். அவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.