"கையாளுவதில்" விற்பன்னராம்.. பொதுப்பணித்துறையின் புதிய ஆலோசகர் குறித்து கருணாநிதி கருத்து!
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஏமராஜ் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: ''ஆலோசகர்" நியமனம் தொடர்கிறதே?
பதில்: தமிழக அரசின் முதலமைச்சர் ஒருவர்; ஆனால் அவருக்கு மேல் "மக்கள் முதல்வர்" என்ற பெயரால் ஒரு "ஆலோசகர்"; தலைமைச் செயலாளருக்கு மேல் ஒரு ஆலோசகர்; டி.ஜி.பி.க்கு மேல் ஒரு ஆலோசகர்; தற்போது பொதுப்பணித் துறையிலும் "ஆலோசகர்" நியமனம் நடந்துள்ளது.
தமிழக அரசின் துறைகளிலேயே, பொதுப்பணித் துறை தான் அதிக அளவுக்கு பணம் புழங்கும் துறை. இந்தத் துறையில் நீர்வளத் துறை பிரிவு முதன்மை தலைமைப் பொறியாளர் ஏமராஜ் கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்திற்கு வேறு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. அந்தப் பணி தங்களுக்குக் கிடைக்குமென்று அவருக்குக் கீழே பணியாற்றி வந்தவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் பொதுப்பணித் துறையில் முதல் முறையாக நீர்வளத் துறை ஆலோசகர் எனப் புதிய பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு ஓய்வு பெற்ற முதன்மை தலைமைப் பொறியாளர் ஏமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் நிர்வாகப் பிரிவு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் அவர் ஓராண்டு வரை நியமிக்கப்பட்டதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
ஏமராஜ் என்பவருக்கு உள்ள "தனி" தகுதி என்னவாம்? அவர் "பன்னீருக்கு" நெருங்கிய உறவினராம்; ஏட்டில் செய்தி வந்துள்ளது. அதுமாத்திரமல்ல; பொதுப்பணித் துறையைக் "கையாளுவதில்" விற்பன்னராம்! இது போதாதா? அதே நேரத்தில் நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் பொறுப்புக்கு கடந்த 20 நாட்களாக யாரும் நியமிக்கப்படாத நிலைமைதான் நீடிப்பதால், அந்தத் துறையின் 500 கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விட முடியாத நிலை உள்ளதாகக் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
யார் இந்த ஏமராஜ்?
ஏமராஜ், பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் மற்றும் நீர் வள ஆதார அமைப்பின் முதன்மைத் தலைமைப் பொறியாளராக இருந்தவர். கடந்த 12ம் தேதி இவருக்கு ஆலோசகர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே இவர் ஓய்வு பெற்று விட்டார்.
ஏற்கனவே பொதுப்பணித்துறையின் பில்டிங்ஸ் பிரிவு முன்னாள் தலைமைப் பொறியாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அவர் தனது பதவி நீட்டிப்பை பூர்த்தி செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
3வது ஆலோகர்
ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், அரசு ஆலோசகரைக முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். பன்னீர் செல்வம் முதல்வரான பின்னர் இன்னொரு ஆலோசகராக முன்னாள் டிஜிபி ராமானுஜம் நியமிக்கப்பட்டார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் முக்கியஆலோசகர் யார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த நிலையில் பன்னீர் செல்வம் வசம் உள்ள பொதுப்பணித்துறையின் ஆலோசகராக அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஏமராஜ் வந்துள்ளார்.