கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்! சாராய வியாபாரியின் மனைவியும் கைது!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக இருவர் கைதான நிலையில் மேலும் விஜயா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக சுமார் 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45),சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சேலம் அரசுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை வரை பலியானோரின் எண்ணிக்கை 29ஆக இருந்த நிலையில் தற்போது சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் என்பவர் பலியாகிவிட்டார். இதனால் பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துவிட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் எனும் கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அவருடைய தம்பி தாமோதரனும் கைது செய்யப்பட்ட நிலையில் கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர். அது போல் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications