சேலம் - சென்னை 8 வழிசாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு.. மத்திய மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேலம் - சென்னை இடையேயான எட்டு வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம் - சென்னை இடையிலான எட்டுவழி பசுமை சாலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சென்னையை வந்தடைகிறது.
இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

8 வழிசாலைக்கு எதிர்ப்பு
இந்நிலையில் சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூர்யபிரகாசம் என்பவர் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீர்நிலைகளுக்கு பாதிப்பு
அவர் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது, மரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தும் முன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தண்ணீர் பஞ்சம்
சேலம் - சென்னை இடையிலான மாவட்டங்களில் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. காடுகளை அழித்து தார்ச்சாலை அமைத்தால் மிகப்பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

ஹைகோர்ட் நோட்டீஸ்
எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான விவசாயிகள் வேலையிழப்பார்கள். இவ்வாறு சூர்யபிரகாசம் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேர்த்து விசாரிக்கப்படும்
ஜூலை 12ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications