கிஷ்கிந்தா ராட்டின விபத்து... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலி
சென்னை: சென்னை அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் சோதனை ஓட்டத்தின் போது ராட்டினம் உடைந்த விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சோமங்கலம் பகுதியில் கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கேரள மாநிலம் கன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்காக ராட்சத ராட்டினத்தை தயாரிக்கும் பணி இங்கு நடைபெற்றதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் பூங்காவுக்கு வந்த பயணிகள் வெளியேறியதும், அந்த ராட்டினம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ராட்டினத்தில் மணல் மூட்டைகளுக்குப் பதிலாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சுழலின் போது ராட்டினம் உடைந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், குன்றத்தூரைச் சேர்ந்த தொழிலாளர் மணி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த சோமங்கலம் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு ஊழியர் இன்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பூங்காவின் உரிமையாளர் ஜோஸ்புனுஸ் மற்றும் மேலாளர் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications