மும்பை சித்தி விநாயகர் கோயில் கணக்கில் ரூ. 9.60 லட்சம் அபேஸ் செய்தவர் புதுக்கோட்டையில் கைது
புதுக்கோட்டை: மும்பையில் உள்ள புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில் கணக்கில் இருந்து ரூ.9.60 லட்சம் பணத்தை மோசடி செய்தவரை புதுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர்.
மும்பை மாநகரில் உள்ளது புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயில். சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆலவயல் பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம் (48). பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் மணிமுத்து ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் இருப்பது குறித்த விவரத்தை அறிந்து கொண்டபிறகு, போலி காசோலை மூலம் வங்கியில் பணம் எடுக்க தீர்மானித்தனர்.
இதைத்தொடர்ந்து கோயில் கணக்குக்கான காசோலையைப் போல் போலியான காசோலை தயாரித்து அதில், ரூ.9.60 லட்சத்தை பெறும்படி பூர்த்தி செய்துள்ளார். அந்த காசோலையை கடந்த 16 ஆம் தேதி பொன்.புதுப்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் மணிமுத்துவின் கணக்கில் செலுத்தி பணத்தை எடுத்துள்ளனர்.
இதையடுத்து வங்கி மேலாளர் ராமநாதன் காசோலையை ஆய்வு செய்ததில் அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்து வந்த அடைக்கலத்தைக் கைது செய்தனர். அவரது நண்பர் மணிமுத்துவை தேடி வருகின்றனர்.
மும்பையில் புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில் கணக்கின் எண் இவர்களுக்கு எப்படி தெரியவந்தது. அவருக்கு யாரும் உடந்தையாக இருக்கிறார்களா? வேறு எங்கும் போலி காசோலை மூலம் பணம் எடுத்துள்ளார்களா? என்பது குறித்து கைதான நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.