தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தலாம்.. ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து
சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளைப் படிப்படியாக மூடி மது விலக்கை அமல்படுத்தலாம் என்று ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தற்போதைய முக்கியப் பிரச்சினையாக மதுக் கடைகளும், மது விலக்கும் மாறியுள்ளது.
மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திமுகவே கூற ஆரம்பித்து விட்டது. பல்வேறு கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம், குஷ்பு போன்றோர் நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்தாமல் தமிழகத்தில் மட்டும் கொண்டு வருவது சாத்தியமல்ல என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மது விலக்கை எப்படி அமல்படுத்தலாம் என்று நமது வாசகர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்துள்ள ஆதரவைப் பார்ப்போம்.
தமிழகத்தில் எப்படி மது விலக்கை அமல்படுத்தலாம்
தமிழகத்தில் மது விலக்கை எப்படி அமல்படுத்தலாம் என்று கருத்துக் கணிப்பு மூலமாக ஒன்இந்தியா தமிழ் வாசகர்களிடம் கேட்கப்பட்டது.
முதலில் இவற்றை மூடலாம்
அதற்கு வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள கடைகளை முதலில் மூடலாம் என்று 12.38 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது கிடைத்த வாக்குகள் 1772 ஆகும்.
கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
அடுத்து கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறைக்கலாம் என்று 7.67 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது கிடைத்த வாக்குகள் 1098 ஆகும்.
கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கலாம்
கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கலாம் என்று 4.85 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதாவது 694 வாக்குகள் இதற்குக் கிடைத்தன.
மூன்றையுமே செய்யலாம்
இந்த மூன்றையுமே செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 6040 வாக்குகள், 42.18 சதவீதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது படிப்படியாக மது விலக்கைக் கொண்டு வர இத்தனை பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக மூடி விடலாம்
அதேசமயம், இதெல்லாம் வேண்டாம், மொத்தமாக அனைத்துக் கடைகளையும் மூடி விடலாம் என்று 32.93 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்குக் கிடைத்த வாக்குகள் 4715 ஆகும்.
இந்தக் கருத்துக் கணிப்பில் மொத்தம் 14,319 வாக்குகள் பதிவாகின.