சட்டசபைக்குப் போவதாக இருந்தால் விஜயகாந்த் மட்டும்தான் போக முடியும்...!
சென்னை: ஆகஸ்ட் 24ம் தேதி கூடும் சட்டசபைக் கூட்டக் கூட்டத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வருகிற 24ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
அரசுத்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவாகவே இருப்பதால் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
அதேசமயம், மது விலக்குப் பிரச்சினையை விஸ்வரூபமாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்
இந்தக் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு ஒரு சிக்கல். அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் யாரும் இதில் கலந்து கொள்ள முடியாது. எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மட்டுமே வர முடியும்.
விதி மீறல் காரணமாக தடை
கடந்த சட்டசபை கூட்டத்தில் தேமுதிக. எம்.எல்.ஏ.க்கள் விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தொடரும் தடை
அந்த கூட்டத்தொடர் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. எனவே தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இந்த சட்டசபை கூட்டத்திலும் பங்கேற்க முடியாது.
விஜயகாந்த் மட்டுமே வரலாம்
கடந்தக் கூட்டத்தின்போது விஜயகாந்த் சபையில் இல்லை. எனவே அவருக்குத் தடை பொருந்தாது. அவருக்குத் தடை விதிக்கப்படவும் இல்லை. எனவே அவர் மட்டுமே 24ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.
அதிருப்தியாளர்கள் வர முடியும்
இருப்பினும் தேமுதிகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் வருவார்கள்.
விஜயகாந்த் வருவாரா
சட்டசபைக்கு வருவேன், வரும்போது வருவேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். எனவே 24ம் தேதி அவர் சிங்கிளாக, சிங்கம் போல வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.