உதகை அரசு மருத்துவமனையில் 'சிசேரியன்' செய்த 4 இளம்தாய்மார்கள் பலி!
உதகை: உதகை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற 4 இளம் தாய்மார்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி முதல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பெண்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அப்பெண்கள் பலியாகி இருக்கலாம் என உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உயிரிழந்த பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், அடுத்தடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் உயிரிழந்த சம்பவம் உதகையில் கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட பத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நான்கு பெண்கள் உயிரிழந்தது, அங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications