ஊட்டி குளிரையும் தாண்டிய ஹீட் செய்தி.. மலை ரயில் கட்டணம் "விர் விர்"!
ஊட்டி மலை ரயில் சேவை கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஊட்டி: 3 நாள் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரயில் கட்டணத்தைத்தான் கிடுகிடுவென உயர்த்தி விட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 210 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் மேட்டு பாளையத்திலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தது. ஆனால் பாதி வழியிலேயே எஞ்சின் கோளாறு ஆகிவிட்டது. ஏற்கனவே கனமழையில் தவித்த பயணிகள், கோளாறு காரணமாக ரொம்பவே அவதிப்பட்டு விட்டனர்.

தொடர் மண் சரிவு
கிட்டத்தட்ட 6 மணி நேரம் குளிரிலும், மழையிலும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தவித்தனர். அதன்பின்னர்தான் மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து எஞ்சினை பழுதுபார்ப்பது, மற்றும் தொடர் மண்சரிவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 3 நாட்களுக்கு மலை ரயில் இயங்காது என்று தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.

மீண்டும் ரயில் சேவை
இந்நிலையில் ஊட்டியில் மழை குறைந்துள்ளதாலும், மண் சரிவுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாலும் இன்று முதல் மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மலை ரயில் கட்டணத்தை பல மடங்காக ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.

நஷ்டம் ஏற்படுகிறது
இந்த கட்டண உயர்வு பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "நீலகிரி மலை ரயிலால் ஆண்டுக்கு 24 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஆனாலும் இந்த மலை ரயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்த ரயிலுக்கென நூற்றாண்டு பழமை உள்ளது. அதனால்தான் இந்த ரயில் நஷ்டத்திலும் தொடர்ந்து இயக்கப்படுகிறது. எனினும் மலை ரயில் நஷ்டத்தை ஓரளவு சரிக்கட்டவே கட்டணத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. 15 ரூபாயாக இருந்த சாதாரண கட்டணம், 75 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 470 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

4 மடங்கு உயர்வு
நஷ்டக்கணக்கை ரயில்வே நிர்வாகம் சொன்னாலும் இப்படி ஒரேடியாக கட்டண விலை உயர்வு யாரும் எதிர்பாராத ஒன்று. 15 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக அதாவது 4 மடங்கு அளவுக்கு விலையை உயர்த்தினால் இதனால் சுற்றுலா பயணிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்புவர்.

பொதுமக்கள் கோரிக்கை
அதனாலேயே இந்த மலை ரயிலுக்கு கூட்டம் அலைமோதும். ரிசர்வேஷன் செய்தாலும் இதே நிலைதான். இவ்வளவு விரும்பி ஆசையாக பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு பெருத்த அதிர்ச்சியாகத்தான் உள்ளது. எனவே கணிசமான கட்டணத்தை சுற்றுலா பயணிகளுக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று மாவட்ட மக்களே ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications