அப்பல்லோவுக்கு போன்போட்ட வாரிசு தலைவர்- புலம்பித் தள்ளிய பிரதாப் ரெட்டி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முக்கிய அரசியல் கட்சியின் வாரிசு தலைவர் போனைப் போட்டு உண்மை நிலவரம் என்ன என "அன்பாக" கேட்டதாக கூறப்படுகிறது.
அப்பல்லோவில் ஒரு மாதமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவ்வப்போது அறிக்கைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன.
முன்னணி ஆங்கில ஊடக குடும்பத்தினர் தெரிவித்த சில கருத்துகள் ஜெயலலிதா நலமுடன் தேறிவருவதை உறுதி செய்தன. அப்பல்லோ வந்து செல்லும் தலைவர்கள் அனைவருக்கும் அதிமுகவினர்தான் விளக்கம் தருகின்றனர்.
அந்த முன்னணி ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கிய அரசியல் கட்சியின் வாரிசு தலைவரை அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து வாரிசு தலைவரிடம் சில விவரங்களை கூறியுள்ளார் ஊடக குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவர் முன்னிலையிலேயே அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டிக்கு போனடித்திருக்கிறார் வாரிசு தலைவர். அப்போது 'உங்க பெர்சனல் நம்பருக்கு எத்தனை முறை அழைப்பது? நான் என்ன பொறுப்பில் இருக்கிறேன் தெரியும்தானே... எனக்கு உண்மையான நிலவரத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் என கண்டிப்பான குரலில் கூறியுள்ளார்..
இதில் அலறிப்போன பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சில தகவல்களை சொல்லியதுடன், கூடவே இந்த விவகாரத்தால் தனது மருத்துவமனையின் வருமான இழப்பையும் சேர்த்துச் சொல்லி சொல்லி புலம்பினார் என்கின்றன முக்கிய கட்சியின் வட்டாரங்கள்.