2வது முறையாக அரியணை ஏறும் ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம்!
சென்னை: தமிழகத்தின் முதல்வர் பதவியில் 2வது முறையாக அமர்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்தப் பதவியில் ஏற்கனவே அவர் 2001ம் ஆண்டு முதல் முறையாக அமர்ந்துள்ளார். அப்போதும் கூட உச்சநீதிமன்றம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததால், ஓ பன்னீர் செல்வம் முதல்வரானார்.
இப்போது அதே ஜெயலலிதாவுக்கு மீண்டும் சட்டச் சிக்கல் ஏற்பட்டு பதவி பறிபோன நிலையில் மீண்டும் முதல்வராகியுள்ளார் பன்னீர் செல்வம்.

ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம்
1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார். தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம். முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

விவசாயி - டீக்கடை அதிபர்
விவசாயம், டீக்கடை என்று வேறு சில முகங்களும் கொண்ட பன்னீர் செல்வம், பணிவுக்கும் பெயர் போனவர். ஜெயலலிதாவிடம் மட்டுமல்லாமல், தான் பணியாற்றும் துறைகளிலும் கூட அதிகாரிகளிடம் அதிர்ந்து பேசாத பண்பாளர் என்ற பெயரைப் பெற்றவர்.

பண்பாளர்..
அதிகாரிகளிடம் மரியாதையாகவும் நடந்து கொள்வதால் அதிகாரிகள் மட்டத்திலும் பன்னீர் செல்வத்துக்கு நல்ல பெயர் உள்ளது.

ஜெ. மீது கேஸ் வந்தபோது நகராட்சித் தலைவராக இருந்தவர்
1996ம் ஆண்டு, அதாவது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு புகார் வந்தபோதும், வழக்கு வந்தபோதும் பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்தார் பன்னீர் செல்வம். பின்னர் 2001 தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பொதுப்பணித்துறை அமைச்சரானார்.

முக்குலத்தின் முதல் முதல்வர்
2001ம் ஆண்டு இவர் முதல்வர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தார். முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமர்ந்தது அதுவே முதல் முறை என்பதால் முக்குலத்தோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றார் ஜெயலலிதா.

2006ல் எதிர்க்கட்சித் தலைவர்
2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியை இழந்தபோது ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.












Click it and Unblock the Notifications