எடப்பாடி பழனிச்சாமி அணியில் தினம் ஒரு நாடகம் அரங்கேறுகிறது.. ஓபிஎஸ் தாக்கு
எடப்பாடி பழனிச்சாமி அணியில் நாள்தோறும் ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
விருத்தாச்சலம்: எடப்பாடி பழனிச்சாமி அணியில் தினம் ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் விருத்தாசலத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்க வேண்டும் என்பதே இந்த தர்மயுத்தத்தின் நோக்கம்.
இரு அணிகள் இணைப்பு என எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நாள்தோறும் ஒவ்வொரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இந்த நாடகம் முடிவுக்கு வந்தால் தான் இரு அணிகள் இணைப்பு சாத்தியப்படும். மத்திய அரசு உடனான உறவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை பின்பற்றி நடப்போம்.
ஜெயலலிதா இருந்த போது மத்திய அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அவரது வழியை பின்பற்றி நடப்போம் ரஜினி மட்டுமல்ல யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு பேசினார்.