சட்டசபை இருக்கை ஒதுக்கீட்டுக்காக ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை: ஓபிஎஸ் 'பொளேர்'
சென்னை: சட்டசபையில் இருக்கை ஒதுக்கீட்டுக்காக மு.க.ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் திமுக தலைவர் கருணாநிதி பெயரே இல்லை என்று நிதி அமைச்சரும் சபை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வீல்சேருடன் சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கும் வகையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை என்று திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கும் வகையில் அவர் பயன்படுத்தும் வீல் சேர் சபைக்குள் வந்து செல்லக்கூடிய வசதி வேண்டும் என சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தோம்.

ஸ்டாலின் புகார்
ஆனால், கருணாநிதி வீல் சேரில் வந்து செல்ல முடியாத வகையில் 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து சட்டசபை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:

கருணாநிதிக்கு இருக்கை
கடந்த 25-ந் தேதியன்று சட்டப் பேரவைக்கு சக்கர நாற்காலியில் பேரவைக்கு வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார், கருணாநிதி. அப்போது இருக்கை எண் 207-க்கு முன்புறம் அவருடைய சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே உறுதிமொழி ஏற்றார்.

விதிப்படிதான்....
அதைக் கருத்தில் கொண்டே அந்த இடம் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேரவைக்குள் வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டுமெனில், அவர் உறுதிமொழி எப்படி எடுத்துக் கொண்டாரோ அதேபோன்றுதான் கலந்து கொள்ள முடியும்.

ஸ்டாலின் பட்டியலில் கருணாநிதி இல்லை
திமுக உறுப்பினர்களுக்கு எந்தெந்த வரிசையில் இருக்கைகள் ஒதுக்க வேண்டுமென்ற பட்டியலை மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். அதில், கருணாநிதியின் பெயர் இடம்பெறவே இல்லை. இதிலிருந்தே, சட்டப் பேரவைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவே இல்லை என்பது தெளிவாகிறது
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications