ஓ.பி.எஸ் பற்றிய செய்திகளை வெளியிட தினகரன், தமிழ்முரசுக்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பற்றிய செய்திகளை வெளியிட தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தன்னை பற்றி தவறான செய்திகள் வெளியிடுவதை தடை செய்யக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடந்த வழக்கில், செய்தி வெளியிட்டதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க கல் பப்ளிகேஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில், தினமலர் செய்தி வெளியிடுவதை தடை செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி தாக்கல் செய்த வழக்கில், தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களில் தன்னை பற்றி தவறான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக அதிமுகவுக்கு எதிராக தனி அணி உருவாக்கி வருவதாகவும், அதற்காக ரகசிய கூட்டங்களை கிழக்கு கடற்கரை சாலையில் நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஒ.பன்னீர் செல்வம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பத்திரிகைகள் திமுக தலைவர் கருணாநிதியின் உறவினரான கலாநிதி மாறனின் கல் பப்ளிகேசன் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பதால், தவறான கற்பனை செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், எனவே தம்மை பற்றி தவறான செய்திகள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை கடந்த சில தினங்களுக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன், மனுதாரர் வழக்கின், ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சசிதரன் கடந்த 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கல் பப்ளிகேஷன் தரப்பில் , ஓ.பன்னீர் செல்வம் குறித்த செய்திகளை ஆதாரத்தோடு தான் வெளியிடுகிறோம் என்றும் மற்ற பத்திரிக்கைகளிலும் அவரைப் பற்றிய செய்திகள் இதே போன்று வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி சசிதரன், செய்தி வெளியிட தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறினார்.
செய்தி வெளியிட்டதற்கான ஆதரங்களை அடுத்து விசாரணையின்போது சமர்பிக்கவேண்டும் என கல் பப்ளிகேஷனுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ தினமலருக்கு எதிராக தொடர்ந்த வழக்கும் ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, தன்னைப்பற்றி செய்தி வெளியிட குமுதம் வார இதழுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் இந்த வழக்கையும் சேர்த்து மூன்று வழக்கையும் ஏப்ரல் 11ம் தேதியன்று ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications