தமிழகம் முழுவதும் உதயமாகிறது ஓபிஎஸ் நற்பணி மன்றம்...டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 'ஷாக்'
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பெயரில் நற்பணி மன்றங்கள் மாநிலம் முழுக்கத் தொடங்க வடசென்னையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் பேரவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அணியினரும் அவர் பெயரில் நற்பணி மன்றம் தொடங்க உள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அக்கட்சி இரண்டாக மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணி என்றும், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக (அம்மா) அணி என்று இரு அணிகளாக செயல்படுகின்றன.
இரண்டு அணிகளும் இணையும் என்று அதிமுகவினர் எதிர்பார்க்கும் நேரத்தில் அதற்கு எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பது மேலும் அதிமுக பிரமுகர்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் நற்பணி மன்றம்
வட சென்னையில் ஒ.பி.எஸ் நற்பணி மன்றம் வெகு விரைவில் திறக்கப்படவுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நற்பணி மன்றம் மூலம் இளைஞர்களையும், மாணவர்களையும் ஓ.பி.எஸ்.அணிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை வட சென்னையில் வலுப்படுத்த திட்டம் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
டிடிவி தினகரன் பேரவை
திகார் சிறையில் இருக்கும் தினகரன் பெயரில் பேரவை ஒன்றை அவரின் ஆதரவாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கினர். அதே போல ஓபிஎஸ் அணியினரும் மன்றம் தொடங்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். ஆக இப்போதைக்கு அதிமுக அணிகள் இணைப்புச் சாத்தியமில்லை என்று தெரிவிக்கிறார்கள் அதிமுகவினர்.
அதிமுக இணைப்பை தடுக்கும் அமைச்சர்கள்
அதிமுக அமைச்சர்கள், இரண்டு அணிகளும் இணைவதைத் தடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, 2 அணிகளும் இணைந்து ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. ஆனால் அவருடன் உள்ள சில அமைச்சர்கள், 2 அணிகளும் இணைவதற்கு முட்டுக்கட்டைகள் போட்டுவருகிறார்கள்.
ஆட்சிக் கவிழும்
சசிகலாவும், தினகரனும் தொடர்ந்து கட்சி பதவியில் நீடித்தால் விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்வது நிச்சயம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஜெயலலிதாவின் உண்மையான கனவு நிறைவேற்றப்படும்." என்றார்.