முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று பியுஷ் கோயல் பொய் சொல்வதா?: ஒபிஎஸ் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பது தரம் தாழ்ந்த பொய்யான குற்றச்சாட்டு என அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அது போன்ற ஒரு கருத்தை மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதும் கண்டனத்துக்குரியது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சர் பியூஷ் கோயல், புது தில்லியில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில், தமிழக முதல்வரை தன்னால் சந்திக்க இயலவில்லை என்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டில் எள் முனையளவும் உண்மை இல்லை என்பதையும், அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடப்பட்ட ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதையும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர், தமிழக நலனுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளார்கள்.
அந்த வகையில், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது படகுகள் திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தியுள்ளார்கள்.
அது போன்றே, விவசாயிகளை பாதிக்கும் கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஓழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திடவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார்கள்.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் வெல்லவே இயலாது என்னும் நிலையில், இது போன்ற தரம் தாழ்ந்த பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயத்திற்காக மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
அது போன்ற ஒரு கருத்தை மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதும் கண்டனத்துக்குரியதாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அமைச்சர்களை நேரில் சந்திப்பதுடன், கடிதங்கள் வாயிலாகவும் தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். பாரதப் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்பங்களில் சந்தித்து தமிழக நலன்களை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் நலனுக்காக நிறைவேற்றவுள்ள திட்டங்களின் அடிப்படையில் எதிர்கொள்வது தான் சிறந்த ஜனநாயக வழியாகும். அதனை விடுத்து, அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இது போன்ற விஷமத்தனமான பிரச்சாரங்களை பியூஷ் கோயல் மற்றும் பொன்.இராதாகிருஷ்ணன் போன்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பியுஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications