ஓ.பிஎஸ் வடக்கே போனா நாம தெற்கை திணறடிப்போம்.. மதுரையை அதகளப்படுத்தும் இபிஎஸ் அணி!
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது பலத்தை கூட்டுவதற்காக தொண்டர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கியுள்ளன.
சென்னை : அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணத்திற்கு போட்டியாக முதல்வர் பழனிசாமி தலைமையில் மதுரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் ஒரு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையை அடுத்த கந்தன்சாவடியில் தொடங்கும் இந்த பயணத்தின் போது தொண்டர்கள் மத்தியில் தங்கள் அணியின் பலத்தை கூட்டவும், உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்படி தயாராவது என்றும் மாவட்ட பிரதிநிதிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலப்பரீட்சை
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பேசி ஒன்றுபட்டு செயல்படும் என்றும் தெரிவித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட நிலையில், இரு கோஷ்டிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க புறப்பட்டு விட்டதால் இனிபேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மதுரையில் எடப்பாடி கூட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தின் காஞ்சி கூட்டத்தை தவிடுபொடியாக்கி மக்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்க மதுரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் பெருவிழா
ஜெ. பேரவை சார்பில் நடைபெறும் இளைஞர் பெருவிழா, 120 தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழா, இளைஞர்களுடன் முதல்வர் அமர்ந்து மதிய உணவு உண்ணும் நிகழ்ச்சி என்ற பக்கா பிளான் போட்டு மதுரையை அதகளப்படுத்தியுள்ளனர் இபிஎஸ் அணியினர்.

எங்கு பார்த்தாலும் போஸ்டர், பேனர், கட் அவுட்தான்
இதையொட்டி மதுரை முழுவதும் அதகளப்படுத்தி வருகிறது எடப்பாடி கோஷ்டி. எங்கு பார்த்தாலும் பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட் மயமாக உள்ளதால் மதுரையே திணறிப் போயுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications