எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் கூட்டாளிகள்: ஓ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு குடும்பத்திற்குள் சிக்கி விடாமல் அதிமுகவை மீட்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் கூட்டாளிகள் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் கூட்டாளிகள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் சென்னை புதுவண்ணாரப்பேட்டை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், எம்.பி.,மைத்ரேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக, அதிமுகவை வளர்த்தவர் ஜெயலலிதா.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற தமிழகம் முழுவதும் வளம் வந்தும், ஸ்டாலினால் வெற்றி பெற முடியவில்லை. சர்க்காரியா கமிஷன் முதல் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வரை திமுக ஆட்சியில் தான் நடந்தது. மின் பிரச்சனையை சரிசெய்யாமல் 5 ஆண்டு காலம் திமுக ஆட்சி செய்தது. திமுக ஆட்சியில் அடைந்த துன்பங்கள் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை.

ஒரு குடும்பத்திற்குள் சிக்கி விடாமல் அதிமுகவை மீட்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. சசிகலா பொதுச் செயலாளர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைவரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கபட நாடகத்தை நடத்துகின்றனர். பிறகு எப்படி இரு அணிகளும் இணைவது பற்றி நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் கூட்டாளிகள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications