13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு செப்டம்பரில் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: மீண்டும் முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு இது ஒரு வனவாசம் முடிந்தது போல. அதாவது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் பதவியில் அமர்ந்த ஓ.பன்னீர் செல்வம், 13 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதே போல் இன்னொரு செப்டம்பர் மாதம் முதல்வராகியுள்ளார்.
2001ம் ஆண்டும் ஜெயலலிதா கோர்ட் தீர்ப்பால் முதல்வர் பதவியை இழந்தார். இப்போதும் ஜெயலலிதா கோர்ட் தீர்ப்பால் முதல்வர் பதவியை இழந்து கைதும் ஆகி சிறைக்குள்ளும் போய் விட்டார். இதனால் 2வது முறையாக ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வசந்தம் வந்துள்ளது.
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்....
2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர் முதல்வராவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உங்கள் வீட்டுப் பிள்ளை
2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை முதல்வர் பதவியில், தமிழகத்தின் புதிய உங்கள் வீட்டுப் பிள்ளையாக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
அனுபவம் புதுமை
முதல் முறையாக முதல்வர் பதவிக்கு ஓ.பி.எஸ் வந்தபோது, அமைச்சராக மட்டுமே இருந்தார். முதல்வர் பதவி என்ற மிகப் பெரிய சுமையைத் தூக்கி ஜெயலலிதா அவர் மீது வைத்தபோது நிச்சயம் கலங்கித்தான் போய் விட்டார் பன்னீர் செல்வம். காரணம், அவருக்கு அப்போது அனுபவம் குறைவு என்பதால்.
அந்த நாள் ஞாபகம்
இன்று மீண்டும் ஒரு செப்டம்பர் மாதத்தில் முதல்வராகியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சமயத்தில் அந்த நாள் ஞாபகம் நமது நெஞ்சத்தில் அலை மோதுகிறது.
நீ எங்கே..
2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி இவர்தான் உங்களது அடுத்த முதல்வர் என்று ஓ.பன்னீர் செல்வத்தை கை காட்டி கூறிய ஜெயலலிதா இன்று சென்னையிலேயே இல்லை. சிறையில் அடைபட்டுள்ளார்.
என்னைத் தெரியுமா....
ஆனால், முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிகம் பேசுவதில்லை. எப்போதும் ஒரு புன்னகை, பவ்யம், அமைதி, சாந்தம்.
முன்பை விட இப்போது நல்ல அனுபவம்...
ஆனால் முன்பை விட இப்போது நல்ல அனுபவத்துடன் உள்ளவராக மாறியுள்ளதால், அரசு நிர்வாகத்தின் அனைத்து வேலைகளிலும் திறம்பட திறமையாளராக மாறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் என்கிறார்கள். ஜெயலலிதா கொடுக்கும் அனைத்து அசைன்மென்ட்களையும் சிறப்பாகவும், சீரிய வகையிலும் செய்து முடித்து நல்ல பெயரும் பெற்றவர் ஓ.பன்னீர் செல்வம்.