ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேனு சபதமிட்ட வைகோவுக்கு இனி தூக்கம் போச்சு - ஓபிஎஸ் தாக்கு!
சென்னை: ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்று கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இனி தூக்கம் வராது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 31 மாவட்டங்களில் நடைபெற்றது. இதையடுத்து இதன் நிறைவு விழா 32-ஆவது மாவட்டமான சென்னையில் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின், எம்எல்ஏ தினகரன், கனிமொழி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே இந்த விழா என கூறி ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை. அது போல் டிடிவி தினகரனும் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

ஆளும் கட்சி
இந்நிலையில் நேற்று இந்த விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில் அதிமுகதான் எப்போதும் ஆளும் கட்சியாக இருக்கும்.

10 லட்சம் பேர்
இதுதான் வரலாறு. தமிழர்களின் நலன் காக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே, எம்ஜிஆரின் புகழும் சக்தியும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மறைந்து போய்விடாது. இந்த விழாவில் 10 லட்சம் பேர் பங்கேற்றதால் சென்னையே குலுங்கியது.

ஸ்டாலின் பெயர்
எம்ஜிஆர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வரலாறு. கருணாநிதியை விமர்சித்து பேசுவதாக கூறி மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் ஸ்டாலின் பெயர் முறையாக இடம்பெற்றும் அவர் பங்கேற்கவில்லை.

குன்றத்தூர் மலை
திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் இருந்தவர்களை விமர்சனம் செய்யாமல் எப்படி இருக்க முடியும். ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்ற வைகோவுக்கு இனி தூக்கமே வராது. குண்டூசியை வைத்துக் கொண்டு குன்றத்தூர் மலையை ஓட்டை போடுவேன் என டிடிவி துடிக்கிறார் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications