என்னது ஜெ. இரட்டை விரலை காட்டினாரா? இனிப்பு சாப்பிட்டாரா? அண்ட புளுகு ஆகாச புளுகு... ஓபிஸ் தாக்கு
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அமைச்சர்கள் சீனிவாசனும் செங்கோட்டையனும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துகளை விடுவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இரட்டை விலையை காண்பித்தார், இனிப்பு சாப்பிட்டார் என பொய் மூட்டைகளை அமைச்சர்கள் சீனிவாசனும் செங்கோட்டையனும் அவிழ்த்துவிடுவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
சென்னையில் தமது வீட்டில் நாமக்கல், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
என் மீது நம்பிக்கை வைத்து ஜெயலலிதா 2 முறை என்னை முதல்வராக்கினார். முதல்வர் பதவி பறிபோனதை எண்ணி நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது.
தஞ்சாவூர் பொம்மை
இந்த முதல்வர் பதவியில் இருந்தால் தஞ்சாவூர் பொம்மை மாதிரி அந்த குடும்பத்தால் ஆட்டி வைக்கப்படுவோம். ஜெயலலிதா வளர்த்த கட்சியும், ஆட்சியும் அந்த ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிட்க் கூடாது என எதிர்த்து போராட வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் அது நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.
ரூ3 கோடி ரொக்கம், 3 கி. தங்கம்
சசிகலா கொடுத்த ரூ.3 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் வேண்டாம் என்று சண்முகநாதன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் நமது அணிக்கு தப்பித்து வந்துவிட்டனர். நம்மாலும் ஒரு கூவத்தூரை ஏற்பாடு செய்திருக்க முடியும். நாம் அப்படி செய்யவில்லை.
அமைச்சர் தங்கமணி திடீர் மாற்றம்
அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அப்போது ஒரு காகிதத்தில் பூஜ்ஜியம் என்று எழுதி சசிகலாவை ஒருவர்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே நல்ல முடிவை எடுங்கள் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் வேறு முடிவை எடுத்துவிட்டனர்.
சசிக்கு ஏன் நோய் தொற்று வரவில்லை
75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது ஏன்? தொற்றுநோய் வந்துவிடும் என்று எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. சரி... அப்படியானால் மருத்துவமனையிலேயே இருந்த சசிகலாவுக்கு தொற்றுநோய் ஏன் தாக்கவில்லை?
அண்டப் புளுகு, ஆகாச புளுகு
ஜெயலலிதா தம்மை பார்த்து இரட்டை விரல்களை உயர்த்தி காண்பித்தார் என்று அண்டப்புளுகு புளுகுகிறார் செங்கோட்டையன். திண்டுக்கல் சீனிவாசனோ மருத்துவமனையில் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டதாக ஆகாச புளுகுகிறார்.
சிபிஐ விசாரணை தேவை
சி.பி.ஐ. விசாரித்தால் தான் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியே வரும். மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் மட்டுமே கட்சியின் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்ற படிப்பினையை உருவாக்க வேண்டும்.