ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணி.. களை கட்டிய போடி!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
தேனி: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவரது சொந்த தொகுதியான போடி நாயக்கனூரில் அதிமுகவினர் பேரணி நடத்தினர். இதில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக திடீரென வெகுண்டெழுந்த முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும், அவர் மீது திரும்பியுள்ளது. அனைத்து சமூக வலை தளங்களிலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது.

அதேநேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் பலரும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரண்டு வருகின்றனர். இதனால் மன்னார்குடி கோஷ்டி குழப்பத்தில் உள்ளது. கட்சியை கைப்பற்றி சசிகலா தரப்பு முதல்வராக வேண்டும் என துடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக, தொண்டர்கள், பொது மக்கள் மத்தியில் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக தொண்டர்கள் பிரமாண்டான பேரணியை நடத்தியுள்ளனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் சசிகலாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஓபிஎஸ்சுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.













Click it and Unblock the Notifications