ஜெ. மரணம்.. விசாரணை கமிஷனை அமைக்க முயற்சித்தேன்.. பிரச்சனை வந்துவிட்டது… ஓபிஎஸ் குற்றச்சாட்டு
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் குணங்களை ஒருங்கே கொண்டவர் ஜெயலலிதா என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷனை அமைக்க முயற்சி செய்த போதுதான் தனக்கு பிரச்சனை வந
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனை அமைக்க முயற்சித்த போதுதான் தனக்கு பிரச்சனை வந்தது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சசிகலா அணியினர் தனியாகவும் ஓபிஎஸ் அணியினர் தனியாகவும் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்து மறைந்த ஆர்.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நலத்திட்டங்களை வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.
அப்போது, விழாவில் பேசிய ஓபிஎஸ், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய மூன்று திராவிட இயக்கத் தலைவர்களை பின்னொற்றி வந்தவர் ஜெயலலிதா என்றும், அவர்கள் மூவரின் அறிவு, ஆற்றல், குண நலம் ஆகியவற்றை ஒருங்கே பெற்று வளர்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், ஜெயலலிதாவால் ஒன்னரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி காட்டிய அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று கூறிய ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனை அமைக்க முயற்சித்த போதுதான் தனக்கு பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்துள்ள பல்வேறு சந்தேகங்களை உரிய நீதி விசாரணை மூலம் வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறிய ஓபிஎஸ், அதிமுகவையும் அதன் ஆட்சியையும் மீட்டெடுக்கும் தர்ம யுத்தம் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.