மதுரை விமான நிலையத்தில் தினகரன்- ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்
டி.டி.வி தினகரன் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
மதுரை : மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி தினகரன் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு நடந்தது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
ஆர்.கே நகர் எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரன் இன்று மதியம் 1.30 மணி விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்தார். அவருக்கு முன்னதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 12.50 மணி விமானத்தில் சென்னை செல்ல இருந்தார்.
இவர்கள் இருவரையும் வழியனுப்ப இருதரப்பு ஆதரவாளர்களும் மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். ஆனால், நேரம் கடந்தும் ஓ.பி.எஸ் விமான நிலையம் வராததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் 1.30 மணி விமானத்தில் செல்லலாம் என்கிற தகவல் வெளியே நின்றிருந்த ஆதரவாளர்களிடையே பரவியது. இதனையடுத்து இரு தரப்பினரும் கோஷமிடத் துவங்கினர்.
டி.டி.வி தரப்பினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷமிட்ட்டதும், அங்கு குவிந்திருந்த ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.