மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு
சென்னை: வட சென்னையில் உள்ள மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகில் சென்று
பார்வையிட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடந்த செவ்வாய்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. பல பகுதிகளில் 6 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்து ஓடியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட சென்னையில் மணலிக்கு அருகே உள்ள சடையங்குப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பிற்குள்ளான இந்த பகுதியில் 1,000 குடும்பங்கள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் தேங்கி இருந்த மழை நீர் தற்போது வடியத்துவங்கியுள்ளது. இங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர்,மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் வெளித்தொடர்பு இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., மூர்த்தி உள்ளிட்டோர், நேற்று முன்தினம் மாலை, படகு மூலம் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். வெள்ளத்தில் சிக்கி நிர்கதியாக நின்ற மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினர். திருவொற்றியூர் சட்டசபை தொகுதியின் கீழ் உள்ள இந்த பகுதியில், தொகுதி எம்.எல்.ஏ., குப்பன் பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் சந்திக்காததால் அவர் மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications