ஓ.பன்னீர் செல்வமும் கோவில் கோவிலாக இறங்க ஆரம்பித்தார்... 'அம்மா'வுக்காக!
சென்னை: அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முக்கியப் பிரமுகர்கள்தான் இதுவரை ஜெயலலிதாவுக்காக காவடி எடுப்பது, தீ மிதிப்பது, யாகம் நடத்துவது என டிசைன் டிசைனாக ஈடுபட்டு வந்தனர். இந்த வரிசையில் தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து விட்டார்.
இன்று சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களுக்குப் போய் அவர் மனமுருக சாமி கும்பிட்டார்.
வேண்டாத சாமி இல்லை, போகாத கோவில் இல்லை, செய்யாத பூஜை இல்லை.. இதுதான் அதிமுகவினரின் இன்றைய நிலை. ஆனாலும் இன்னும் ஜெயலலிதாவின் சட்ட ரீதியான போராட்டம் நின்றபாடில்லை. இன்னும் சில நாட்களில் அவரது அப்பீல் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கவுள்ளார்.
இதனால் அதிமுகவினரின் தெய்வ முறையிடல்கள் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. வேள்விகளும், யாகங்களும், பூஜைகளும் அதிகரித்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து விட்டார். ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டும், மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வேண்டியும் அதிமுக பேச்சாளர்கள் இன்று ஆன்மிக நடைபயணம் தொடங்கினர்.
இந்த வேலைகளில் இதுவரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மட்டும் ஈடுபடாமல் இருந்தார். இன்று அவரும் களத்தில் குதித்து விட்டார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பிடாரி இளம் காளியம்மன் கோவிலில் இருந்து திருப்பதி வரை செல்லும் நடைபயணத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு திடீர் என விசிட் அடித்து சாமி கும்பிட்டார். அவருடன் அதிமுக முக்கியஸ்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.