இலங்கையில் உள்ள 38 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை தேவை .. மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வாடி வரும் 38 தமிழக மீனவர்களையும் விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்தும் 3 படகுகளில் 14 தமிழக மீனவர்கள் 23.11.2014 அன்று மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று காங்கேசன் துறைமுகத்தில் வைத்துள்ளது.

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டு, வீடுகளுக்கு திரும்பிய நிலையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானதாகும். அந்த 5 மீனவர்களையும் மீட்க அம்மா இடைவிடாது போராடியதும், அவர்கள் மீதான மேல்முறையீட்டு வழக்கை நடத்த தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதி உதவி செய்ததும் உங்களுக்கு தெரியும்.
தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டதால், 5 மீனவர்களும் 20.11.2014 அன்று விடுதலை செய்யப்பட்டனர். சரியான நேரத்தில் தலையிட்டு உதவியதற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றாலும் 2 மாதங்களுக்கு முன்பு பிடித்து செல்லப்பட்ட 24 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இன்னமும் உள்னர். இந்த நிலையில் நேற்று 14 தமிழக மீனவர்களை பிடித்துச் சென்றுள்ளனர். பாக் ஜலசந்தி பகுதியில் தங்களது பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் தங்கள் வழக்கமான தந்திரங்களை கையாண்டு பிடித்து சென்றுள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளை திரும்பத்தராமல் வைத்துக் கொள்ளும் இலங்கை அரசின் தந்திரம் பற்றி எங்கள் தலைவி அம்மா பலதடவை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இப்படி படகுகளை இழந்துள்ள தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது வரை 78 படகுகளை இலங்கை அரசு முடக்கி வைத்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக அந்த 78 படகுகளும் சேதமாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, 78 படகுகளையும் உடனே மீட்க உறுதி செய்ய வேண்டும்.
படகுகளை இலங்கை தராமல் இருப்பது தமிழக மீனவ சமுதாய மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க எங்கள் தலைவி அம்மா 2 திட்டங்களை கூறியுள்ளார். அதில் ஒன்று, மீனவர்களுக்கு ரூ. 1520 கோடி கொடுத்து பெரிய எந்திர படகுகள் வாங்கி, ஆழ்கடலில் மீன்பிடிக்க செய்யும் திட்டமாகும்.
மற்றொன்று இலங்கையுடன் 1974, 1976ம் ஆண்டுகளில் இந்தியா செய்த ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற திட்டமாகும். கச்சத்தீவை திரும்ப பெற எங்கள் அம்மா சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரிய பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க உரிமை மறுக்கப்படுவது, அவர்களிடையே கடும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, எங்கள் அம்மா கூறி வருவது போல கச்சத்தீவை மீட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம் பரிய பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்து, நீண்ட காலமாக உள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வெளியுறவு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள நேற்று பிடித்து செல்லப்பட்ட 14 மீனவர்கள் உள்ளிட்ட 38 பேரையும் அவர்களது 78 படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications