TNPSC தேர்வு மையத்தால் வந்த குழப்பம்.. அனுமதி மறுப்பால் கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் ஷாக்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்தால் வந்த குழப்பத்தால் தான் தாமதம் ஏற்பட்டதாக தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது.

தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த தேர்வு 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் தேர்வர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களிலும் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வந்ததால், தேர்வு மையம் எதுவென்று தெரியாமல் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனால் 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. 9.30 மணிக்கு தொடங்கும் தேர்விற்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்ததாக கூறி, அவர்களுக்கு தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தேர்வு மையத்தால் தான் குழப்பம் ஏற்பட்டதாக கூறி தேர்வர்கள் முறையிட்டபோதிலும், சீர்காழி வட்டாட்சியர், அவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தேர்வர்கள் அந்த இடத்திலேயே தேர்வர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications