சென்னை அண்ணா சாலையில் பெருக்கெடுத்து ஓடிய "மணல் ஆறு"!
சென்னை: சென்னை அண்ணா சாலையில் திடீரென பெருக்கெடுத்து ஓடிய மணல் ஆறால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் எதிரொலியாக இந்த மணல் குவியல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சைதாப்பேட்டை வரை பாதாள சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியின்போது திடீர் திடீரென பரபரப்பு சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
கடந்த ஜூலை மாதம் சென்னை எழும்பூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள பாத்ரூமிலிருந்து குபுகுபுவென மணல் பொங்கி வந்தது. மெட்ரோ பணியால் இது ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் காவல் நிலையம் அருகே ஸ்பென்சர் எதிர்புற சாலையில் திடீரென மணல் குபுகுபுவென பொங்கி ஆறு போல ஓடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுவும் மெட்ரோ ரயில் பணியால் ஏற்பட்டதுதான் என்று கூறப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் யாரும் செல்லாதபடி தடுக்கப்பட்டனர்.